தமிழகத்தில் UKG & LKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு?
தமிழகத்தில் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில், UKG மற்றும் LKG வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டுமாக திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், நவ.1ம் தேதி முதல் 1 லிருந்து 8 வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்த மாணவர்களுக்கான வகுப்புகள் அனைத்தும் இதுவரை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு ஜன.3ம் தேதி முதல் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்க தமிழகத்தில் உள்ள அனைத்து UKG மற்றும் LKG வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டுமாக திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா, செயலர் இளங்கோவன் ஆகியோர் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் கடந்த நவ.1ம் முதல் அங்கன்வாடி உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. அங்கன்வாடிகளில் இரண்டரை வயதுடைய குழந்தைகள் மட்டுமே கல்வி கற்று வரும் நிலையில், UKG மற்றும் LKG மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. இந்த மாணவர்கள் கிட்டத்தட்ட 20 மாதங்களாக ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர். இது மாணவர்கள் மட்டும் அல்லாமல் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலை தருகிறது.
பொதுவாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களின் ஆரம்ப கல்வி என்பது அடித்தளம் என்பதால் இனி மேலாவது UKG மற்றும் LKG மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் UKG மற்றும் LKG மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மழலையர் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment